உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்குள்ள 6வது வார்டு இந்திரா நகரில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
தற்போது நகரில் வளர்ந்து வரும் பகுதியாக இருப்பதால் அதிக அளவில் பொது மக்கள் இப்பகுதியில் குடியேறி வருகின்றனர். இந்நிலையில் நகரின் மேற்கு பகுதியில் தண்ணீரின்றி வறண்டு கிணற்றை எவ்வித பாதுகாப்பும் இன்றி பேரூராட்சி நிர்வாகம் குப்பைக் கிடங்காக மாற்றி பொதுமக்களிடம் பெரும் குப்பைகளைக் கொட்டி வருகிறது.
இந்தக் குப்பை கிடங்கில் பல மாதங்களாக வெளியேறும் புகையால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரியவர்கள் பலர் மூச்சுத் திணறலால் அவதிப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
எனவே பேரூராட்சி நிர்வாகம் அனுமதி இன்றியும், பாதுகாப்பு இல்லாமல் இயங்கும் குப்பைக் கிடங்கை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.