சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரகட்டுப்பாட்டு கருவிகள் சேலம் மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து செவ்வாய்க்கிழமை சங்ககிரி வந்தடைந்தது.
சங்ககிரி வந்த இயந்திரத்தை தேர்தல் அலுவலர்கள் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு அறையில் வைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளின் முன்னிலையில் மூடி முத்திரையிட்டனர்.
சங்ககிரி சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் 389 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்காளர்கள் வாக்களிக்கத் தேவையான வாக்குப்பதிவு இயந்திரக் கட்டுப்பாட்டு கருவிகள் சேலம் மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து 10 கருவிகள் கொண்ட 47 பெட்டிகளில் மொத்தம் 467 கட்டுப்பாட்டு கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டன.
ஆட்சியரகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட கட்டுப்பாட்டு கருவிகளை சங்ககிரி சட்டப்பேரவை தொகுதி தேர்தல் அலுவலர் கோ.வேடியப்பன் தலைமையில் உதவி அலுவலர் எஸ்.விஜி, தேர்தல் துணை வட்டாட்சியர் பி.சிவராஜ், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ராஜேந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் ஜெயக்குமார் ஆகியோர் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் அரசியல் கட்சி நிர்வாகிகளின் முன்னிலையில் வைத்தனர். பின்னர் பாதுகாப்பு அறை மூடி முத்திரையிடப்பட்டது. அறைகளுக்கும் முன், பின் பகுதிகளில் உள்பட 8 காமிராக்கள் பொருத்தப்பட்டு அலுவலர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.
மேலும் பாதுகாப்பு அறையின் முன்பு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக நகரச் செயலர் சி.செல்வம், திமுக நகரச் செயலர் ஆர்.சுப்ரமணியன், காங்கிரஸ் நகர நிர்வாகி எ.ரவி, பாஜக எஸ்.எம்.ஜெயபாலன், தேமுதிக வி.பி.செந்தில்குமார், மதிமுக நகரச் செயலர் என்.கதிர்வேல் ஆகியோர் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திர கட்டுப்பாட்டு கருவிகளை பார்வையிட்டனர்.