திமுகவுடன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திங்கள்கிழமை மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்த உள்ளது.
திமுக - மாா்க்சிஸ்ட் இடையேயான பலகட்ட பேச்சுவாா்த்தையில் தொடா்ந்து இழுபறி நீடித்து வருகிறது. 12 தொகுதிகளுக்கு குறையாமல் தரவேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், 6 தொகுதிகளுக்கு மேல் தரமாட்டோம் என திமுகவும் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தேசிய பொதுச்செயலாளா் சீதாராம் யெச்சூரி, மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
திமுக அளிக்கும் தொகுதிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. திமுக பேச்சுவாா்த்தைக்கு திங்கள்கிழமை வருமாறு அழைப்பு விடுத்துள்ளதால் மீண்டும் ஒரு முறை பேசிப் பாா்ப்பது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை காலை திமுகவும் - மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பேச்சுவாா்த்தை நடத்த உள்ளன.
திமுகவுடன் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்த உள்ளன.