கம்பம்: சட்டமன்றத் தேர்தல் எதிரொலியாக தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக - கேரள எல்லைப்பகுதியான குமுளி, கம்பமெட்டு பகுதியில், மருத்துவமுகாம், சோதனைச் சாவடிகள் செயல்படவில்லை.
தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக - கேரள எல்லையில் உள்ள குமுளி, கம்பமெட்டு ஆகிய இடங்களில் சோதனைச் சாவடிகள் உள்ளன.
கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக இ-பாஸ் அனுமதி மற்றும் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டது. மேலும் தேனி மாவட்டத்தில் உள்ள குமுளி வழியாக மட்டும் கேரளத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மீண்டும் கரோனா பரவல் காரணமாக மாநில எல்லைகளில் இ-பாஸ் கட்டாயம் என மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
இதனால் திங்கள்கிழமை தேனி மாவட்டத்தில் இருந்து கேரளத்துக்குச் செல்லும் பல ஆயிரக்கணக்கான ஆண், பெண் தோட்ட தொழிலாளர்கள் குழப்பமடைந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த அளவில் இ-பாஸ் அனுமதி, மருத்துவ முகாம் எதுவும் அமைக்கப்படவில்லை.
இதுபற்றி வருவாய்த்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து எவ்வித தகவலும் வரவில்லை என்றார்.
இதே போல் குமுளி காவல் நிலைய காவலர்களிடம் கேட்ட போது, கடந்த முறை அருகிலேயே இ-பாஸ் மற்றும் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த உத்தரவும் வரவில்லை என்றனர்.