விராலிமலை: விராலிமலை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை அதிகாலை இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் கட்டடத் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள கோன்குடி பட்டியைச் சேர்ந்த சிதம்பரம் மகன் பாலசுப்பிரமணி(35), மேலும் அதே ஊரைச் சேர்ந்த பிச்சை மகன் ராஜேந்திரன்(50) இருவரும் திருச்சி மாவட்டம் பாத்திமா நகரில் ஐஐடி நிறுவனத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பணி முடிந்து இருவரும் இருசக்கர வாகனத்தில் திருச்சியிலிருந்து மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இலுப்பூருக்கு சென்று கொண்டிருந்தபோது விராலிமலை அருகே உள்ள மேலபச்சகுடி பிரிவு அருகே சென்றபோது பின்னால் வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியதில் நிகழ்விடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். தகவலறிந்து நிகழ்விடம் சென்ற விராலிமலை காவலர்கள் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
மேலும் கார் ஓட்டுனர் திருச்சி பாலக்கரை மல்லிகைபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ஜெரால்டை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.