திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். இத்தலத்திற்கு திருச்சி மட்டுமல்லாது பல்வேறு பகுதியில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்வர்.
மயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறும். கடந்தாண்டு கரோனா வைரஸ் தொற்று காரணமாக சித்திரை தேரோட்டம் விழா ரத்தானது.
இந்நிலையில் இந்த ஆண்டு சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு பூச்சொரிதல் விழா இன்று தொடங்கியது.
மும்மூர்த்திகளை நோக்கி மாயாசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும் உலக நன்மைக்காகவும், இத்திருதலத்தில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எல்லா விதமான நோய்களும், தீவினைகளும் அணுகாது சகல சௌபாக்கியங்களும் கிடைக்க மரபு மாரி அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது சிறப்பம்சம்.
வருடம்தோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி வரை இருப்பது விரதம் இருப்பது இக்கோவிலின் தனிப் பெரும் சிறப்பாகும்.
இந்த 28 நாட்களும் திருக்கோயிலில் அம்மனுக்கு தளிகை நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, நீர்மோர் பானகம், மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக செய்யப்படுகிறது.
பூச்சொரிதல் விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விக்னேஷ்வர பூஜை, புண்ணியாக வாஜனம், அனுக்ஞை,வாஸ்து சாந்தி அங்குரார்பணம் உள்ளிட்ட பூஜைகள் முடிந்து மீனம் லக்கனத்தில் அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கி பூச்சொரிதல் விழா நடைப்பெற்றது.
பூச்சொரிதல் விழாவிற்கு தட்டுகளில் பூக்களை ஏந்தி, யானையுடன் தேரோடும் வீதியில் ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பூக்களை சாத்தினர்.
விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் தலைமையில் கோயில் பணியாளர்கள்,ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.