கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் கம்பராயப்பெருமாள் கேயிலுக்கு சொந்தமான சொத்துக்களின் தற்போதைய நிலை குறித்தும், பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் சென்னை திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் கம்பம் ஸ்ரீ கம்பராயப்பெருமாள் கோயில் முக்கியமானது. நகரின் மையப்பகுதியில் 10 ஏக்கர் 10 சென்டு பரப்பளவில் அமைந்துள்ளது.
இந்நிலையில், கோயில் சொத்துக்கள் மற்றும் இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளது குறித்தும், நிர்வாக அனுமதியின்றி கோவில் இடத்தில் கட்டடங்கள் கட்டி உள்ளது குறித்தும், கோவிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்து தரப்படவில்லை என்பது குறித்தும் புகார்கள் வந்தது.
இதனைத் தொடர்ந்து, சென்னை திருத்தொண்டர் சபை நிறுவனரும், தென்மண்டல காரியதரிசியுமான ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை இரவு கம்பராய பெருமாள் கோயிலில் ஆய்வு செய்தார்.
அப்போது பக்தர்கள் அவரிடம், முருகன் கோயில் சஷ்டி மண்டபம் மழை பெய்தால் ஒழுகிறது, குடிதண்ணீர் வைக்கப்பட்டுள்ள தொட்டி பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படவில்லை.
கரோனா தொற்று காலம் முதல் பக்தர்களை கோயிலுக்குள் இருக்க அனுமதிக்கவில்லை, இயற்கை உபாதை கழிக்க சிறுநீர் கழிப்பிடம் இல்லை, கோயில் வளாகத்தை சுத்தம் செய்யாததால் புதர்மண்டி கிடக்கிறது. மரங்கள் வெட்டப்பட்டள்ளது, கோயில் செயல் அலுவலர் முறையாக அலுவலகத்திற்கு வருவதில்லை என புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து கோவிலில் மரங்கள் வெட்டப்பட்ட இடங்களையும், பக்தர்களுக்கு குடிதண்ணீர் வைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் தொட்டி, முருகன் கோவில் சஷ்டி மண்டபம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
பின் கோயில் நுழைவு வாயில் பகுதியில் தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களையும் பார்வையிட்டார்.
இதுகுறித்து ராதாகிருஷ்ணன் கூறுகையில், தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்கள், தொன்று தொட்டு பலராலும் அபகரிக்கப்பட்டு வருகிறது.
கம்பம் கம்பராய பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் சட்டவிரோதமாக கட்டுமானங்களை அத்துமீறி கட்டியவர்கள்மீது சட்டரீதியாக குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஒரு கோயிலின் செயல் அலுவர் யார் என்ற பெயர்பலகையும், அவர் பணியில் உள்ளாரா, களப்பணிக்கு சென்றுள்ளாரா என்ற தகவல் கோவிலில் இருக்க வேண்டும்.
கம்பராய பெருமாள் கோவிலில் நிர்வாக அலுவலர் பணிக்கு வருவதில்லை என தெரிவித்துள்ளனர்.
கோவிலில் பக்தர்களுக்கான எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. மழையில் ஒழுகும் முருகன்கோவில் சஷ்டி மண்டபம் உபயதாரர்கள் முலம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.