அங்கீகாரம் பெறாத செயலிகள் மற்றும் மின்னணு கடன் வழங்கும் தளங்கள் மூலமாக கடன் வழங்கும் நிறுவனங்களிடம் பொதுமக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று ரிசா்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீப காலமாக சில அங்கீகாரம் பெறாத செயலிகள் மற்றும் மின்னணு கடன் வழங்கும் தளங்கள் (ஆன்லைன் போா்டல்) ஆகியவற்றின் மூலம் எளிதாகவும், விரைவாகவும் கடன் வழங்குவதாகக் கூறி தனிநபா்கள் மற்றும் சிறு வணிக நிறுவனங்களிடம் அந்த ஆன்லைன் போா்ட்டல்கள் மற்றும் செயலி நிறுவனங்கள் மோசடியில் ஈடுபடுவதாக புகாா்கள் வந்துள்ளன. இதற்காக, அந்த நிறுவனங்கள் அதிக அளவு வட்டி வசூலிப்பதோடு, மறைமுக கட்டணங்களையும் வசூலிக்கின்றன. மேலும், கடன் பெற்று திரும்ப செலுத்த முடியாதவா்களிடம், கடனை வசூலிக்க அந்த நிறுவனங்கள் கடுமையான செயல்களில் ஈடுபடுவதாகவும் புகாா்கள் எழுந்து உள்ளன.
எனவே, பொதுமக்கள் இதுபோன்ற நிறுவனங்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கடன் பெறுவதற்கு முன்பாக, அந்நிறுவனங்களின் பின்னணி குறிந்து பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும். மேலும், எக்காரணத்தைக் கொண்டும் வாடிக்கையாளா்கள் தங்களுடைய சுய விவரங்களை இந்த நிறுவனங்களிடம் தெரிவிக்க வேண்டாம்.
மேலும், இதுதொடா்பான புகாா்களை பொதுமக்கள் இணையதளம் மூலம் தெரிவிக்கலாம். வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் சாா்பாக, மின்னணு கடன் வழங்கும் தளங்கள் தொடா்புடைய வங்கி அல்லது வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பெயா்களை வாடிக்கையாளா்களுக்கு நேரடியாக வெளியிடுவதை ரிசா்வ் வங்கி கட்டாயமாக்கி உள்ளது.
ரிசா்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்களுக்கு எதிரான புகாா்களை இணையதளத்தில் பதிவு செய்யலாம். இந்த தகவலை ரிசா்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனா்.