அம்பாசமுத்திரம்: தென்காசி மாவட்டம், கடையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாருதி வேன் சனிக்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. தென்காசி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
திரவியநகர் அருகிலுள்ள புல்லுக்கட்டுவலசைச் சேர்ந்த வேலாயுதம், இவரது மகன் திருமலை. இவர் கடையம் தென்காசி சாலையில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவருக்குச் சொந்தமான மாருதி ஆம்னி வேனை கடைக்கு பின்புறம் நிறுத்தி சென்றிருந்தார்.
தீப்பிடித்து எரியும் மாருதி வேன்.
இந்நிலையில், இன்று சனிக்கிழமை அதிகாலை மாருதி ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து உடனடியாக தென்காசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்ததை அடுத்து தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலர் கவிதா உத்தரவின்பேரில், மாவட்ட உதவி அலுவலர் வெட்டும் பெருமாள் தலைமையில் நிலைய அலுவலர் ரமேஷ், நிலைய அலுவலர் (போக்குவரத்து) சுந்தரராஜன், கணேசன், ஜெகதீஷ்குமார், விஸ்வநாதன், வேல்முருகன், ராமசாமி ஆகியோர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
மாருதி வேன் நிறுத்தியிருந்த இடத்தில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். காலையில் கல்லூரி, பள்ளி வாகனங்கள் வெளியே சென்றுவிட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மேலும் ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்தது குறித்து தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.