சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வைகை நதியோரம் அமைந்துள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத சோமநாத சுவாமி கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.
எல்லா மக்களும் அனைத்து செல்வங்களையும் பெற்று ஆனந்தமுடன் வாழ வேண்டி நடத்தப்பட்ட இந்த திருவிளக்கு பூஜை வழிபாட்டில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு விளக்குப் பூஜை நடத்தினர்.
ஆனந்தவல்லி அம்மன் சன்னதி முன் மண்டபத்தில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையின் போது உற்சவர் ஆனந்தவல்லி அம்மன் அங்குச் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
திருவிளக்கு பூஜையின் நிறைவாக மங்கள ஆரத்தி நடைபெற்று முடிந்து ஆனந்தவல்லி அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த வழிபாட்டிற்கான ஏற்பாடுகளைக் கோயிலில் உழவாரப் பணி மேற்கொள்ளும் பெண் பக்தர்கள் செய்திருந்தனர்.