தஞ்சாவூர் அருகே சனிக்கிழமை பிற்பகல் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் ஐஐடி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
தஞ்சாவூர் அருகே மணக்கரம்பை செபஸ்தியார் கோயில் தெருவைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் மகன் ஆனஸ்ட்ராஜ் (21). இவரும், தஞ்சாவூர் டவுன் கரம்பையைச் சேர்ந்த மதியழகன் மகன் விஜய் (21) என்பவரும் திருவையாறு அருகே கடுவெளியில் உள்ள ஐ.டி.ஐ.யில் இரண்டாமாண்டு எலெக்டீரீசியன் படித்து வந்தனர்.
இருவரும் சனிக்கிழமை ஐடிஐயில் இரண்டாமாண்டு தேர்வு எழுதிவிட்டு மோட்டார் சைக்கிளில் திருவையாறு வழியாக வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தனர். அம்மன்பேட்டை கடைவீதியில் சென்ற இவர்கள் மீது தஞ்சாவூரிலிருந்து திருவையாறு நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் ஆனஸ்ட்ராஜ், விஜய் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.