திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் விவசாய சங்கத்தினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருநெல்வேலி வண்ணார்பேட்டை ரவுண்டானா அருகே கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் டி.செல்லத்துரை தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் முருகன் முன்னிலை வகித்தார்.
புது தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரியும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சுடலை ராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் ராஜகுரு, மாவட்ட துணைச் செயலர் எஸ்.செந்தில், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் மாறவர்மன் உள்பட பலர் பங்கேற்றனர்.