பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நீர்வரத்து குறைந்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் வேதனையடைந்துள்ளனர்.
கரோனா ஊரடங்கால் கடந்த பிப்ரவரி 2020ம் ஆண்டு முதல் கும்பக்கரை அருவி மூடப்பட்டது. ஊரடங்கு தளர்விற்கு பின் பிப்ரவரி 1ம் தேதி சுற்றுலாப்பயணிகள் அருவிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த 20 நாட்களுக்கு மேலாகக் கொடைக்கானல் மலைப்பகுதியில் நீர்வரத்து குறைந்துள்ளதால் அருவிக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் அருவிக்குச் செல்லும் செல்லும் சுற்றுலாப் பயணிகள் குறைந்தளவு நீரில் குளித்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மழை இல்லாததால் சில நாள்களில் தண்ணீர் வரத்து முற்றிலும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருச்சியைச் சேர்ந்த பாலமுருகன் கூறியதாவது,
அருவியில் நீர்வரத்து அதிகளவு இருக்கும் என நினைத்து குடும்பத்துடன் வந்து ஏமாற்றமடைந்துள்ளோம். இனிவரும் காலங்களில் வனத்துறையினரின் வலைத்தளத்தில் நீர்வரத்தின் அளவு குறித்து தினமும் வெளியிட்டால் வெளியூர் பகுதி சுற்றுலாப்பயணிகள் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்றார்.