ஓங்காளியம்மன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஈரோடு கோட்டை பெரியபாவடி பகுதியில் எழுந்தருளியிருக்கும் ஓங்காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் பொங்கல் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடக்கும். பெரிய பாவடியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
நடப்பாண்டுக்கான திருவிழா கடந்த, பிப்.,1ல் பூசாட்டுதலுடன் தொடங்கியது. 2ல் மாலை காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அபிஷேகம் செய்தனர். 3ல் அக்னி கபாலம் ஊர்வலம் நடந்தது. 4ல் விளக்குப் பூஜையும், ஊஞ்சல் சேவையும் நடந்து. நேற்று காலை 6:00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. காரை வாய்க்காலிலிருந்து கரகம் எடுத்து வந்த கோவில் பூசாரி ரஞ்சித் முதலில் குண்டம் இறங்கினார் அவரை தொடர்ந்து ஏராளமான, பக்தர்கள், பெண்கள், சிறுவர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வந்தார். இன்று இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது. நாளை காலை மறு அபிஷேகம் நடக்கிறது. அத்துடன் விழா நிறைவு பெறுகிறது.