சென்னை: தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள பேரவைத் தேர்தலில் கரோனா பாதித்த நோயாளிகள் வாக்களிக்க முடியுமா என்பதற்கு வாக்களிக்க முடியும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறுகையில், தமிழகத்தில் மார்ச் 3-ஆம் தேதி முதல் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் இதுவரை ரூ.11 கோடி மதிப்பிலான பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க வரும் வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். எனவே, வாக்களிக்க வரும் வாக்காளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும்.
சட்டப்பேரவைத் தேர்தலின் போது கரோனா பாதித்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்கள் வாக்களிக்க, கடைசி ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தற்பாதுகாப்பு கவசம் அணிந்து கொண்டு, அவரவர் வாக்குக்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் கடைசி ஒரு மணி நேரத்தில் கரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம் என்று விளக்கம் அளித்துள்ளார்.