நாமக்கல்: நாமக்கல் அருகே பழமையான வீட்டை இடித்து அகற்ற முற்பட்ட போது சுவர் இடிந்து விழுந்தது. இதில், இரண்டு வயது குழந்தை உள்பட 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம், எர்ணாபுரம் அருகே கணக்கத் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி (65). இவரது மனைவி மல்லிகா (60). இவர்களுக்கு ஜெயகுமார் என்ற மகன் உள்ளார். தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
நாமக்கல் அருகே மூன்று பேரை பலிகொண்ட இடிந்து விழுந்த வீட்டின் சுவர்.
இந்தநிலையில் சின்னத்தம்பி தனது வீட்டின் அருகே உள்ள பழமையான வீட்டை இடித்து அகற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வந்தார். வியாழக்கிழமை காலை 9 மணியளவில் வீட்டின் ஓடுகளை அகற்றி விட்டு சுவரை இடிக்க முற்பட்டபோது திடீரென மண் சுவர் சரிந்து சர சரவென்று கீழே விழுந்தது. வீடு இடிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மனைவி பூங்கொடி (55) மற்றும் அவரது இரண்டு வயதுடைய பேத்தி தேவிஸ்ரீ மற்றும் சின்னத்தம்பி ஆகியோர் மீது சுவர் விழுந்ததில் நிகழ்விடத்திலேயே மூவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து நல்லிபாளையம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.