கடலூர்: கடலூர் மாவட்டத்தில் 60 ஆயிரம் பேர் தபால் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்தார்.
வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கடலூர் பேருந்து நிலையத்தில் வாக்குப்பதிவு விழிப்புணர்வு வாகனத்தை ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தொடங்கி வைத்தார்.
பின்னர், பொதுமக்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மத்தியில் வாக்காளர் உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது: கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவை தொகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் சுமார் 20 ஆயிரம் பேரும், 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் சுமார் 40 ஆயிரம் பேரும் உள்ளனர். அதேபோல் கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தபால் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 100 சதவீதம் வாக்குப்பதிவு என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறினார்.