தேனி மாவட்டம் சுருளி அருவியில் கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்னே நீர்வரத்து நின்றது.
தேனி மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் முதன்மையானது கம்பம் அருகே உள்ள சுருளி அருவி. சுருளி அருவி அடர்ந்த வனப்பகுதியில் இருப்பதால் ஆண்டு முழுவதும் நீர்வரத்து வந்து கொண்டே இருக்கும், கோடைக் காலமான ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் நீர்வரத்து குறையும். அருவி வளாகப் பகுதியில் கோவில்கள் இருப்பதால் பக்தர்கள் நேர்த்திக் கடன்களைச் செலுத்தியும், முன்னோர்கள் நினைவு நாளை அனுசரித்து வழிபாடுகள் செய்தும் வருவார்கள்.
தற்போது கரோனா தொற்று பரவல் காரணமாக சுமார் 11 மாதங்களாக சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் சுருளி அருவியைச் சுற்றிப் பார்க்க மட்டும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். சுருளியாற்றில் பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை முடிந்த நிலையில் சுருளி அருவியில் தொடர்ந்து நீர்வரத்து இருந்துகொண்டே இருந்தது. அருவிக்கு நீர்வரத்து தரும் ஈத்தைப்பாறை, அரிசிப்பாறை நீர் ஊற்று ஓடைகளில் புதன்கிழமை நிலவரப்படி தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால் சுருளி அருவியிலும் நீர்வரத்து குறைந்தது.
இதுபற்றி வனத்துறை ஊழியர்கள் கூறும்போது கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்னேயே சுருளி அருவியில் நீர்வரத்து நின்றுள்ளது என்றனர்.