அவிநாசி: பெருமாநல்லூர் அருகே வேட்டைக்குச் சென்ற போது, துப்பாக்கி குண்டு பாய்ந்து ஒருவர் காயமடைந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் காவல் எல்லைக்கு உள்பட்ட நியூ திருப்பூர் பகுதி பின்புறம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முருகேசன் (29) என்பவர் உள்பட 5 பேர் முயல் வேட்டைக்குச் சென்றுள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்து குண்டு பாய்ந்ததில் பலத்த காயமடைந்த முருகேசன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதைத் தொடர்ந்து பெருமாநல்லூர் காவல் துறையினர் இவ்வழக்கு குறித்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில் இவ்வழக்கில் தொடர்புடைய அவிநாசி பழங்கரை நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த மனோகரன், மகேந்திரன், சந்துரு, ராஜ்குமார் ஆகியோரை பெருமாநல்லூர் காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்தனர்.
மேலும் இவர்களிடம் இருந்து உரிமம் இல்லாத 3 நாட்டுத் துப்பாக்கிகள், வெடிமருந்து, குண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.