தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்க நாமக்கல் மாவட்டத்தில் 36 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த குழுவினர் முக்கிய சாலைகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராசிபுரம் தொகுதிக்குட்பட்ட மெட்டலாவில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சுந்தரபாண்டியன் தலைமையில் இன்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, சென்னை பொன்னேரியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் நாமக்கல்லில் முட்டை வாங்குவதற்காக உரிய ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.65 ஆயிரம், ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த பாரதி என்பவரிடம் ரூ.5 லட்சம் மேலும் ஆண்டகளூர்கேட் பகுதியில் பச்சுடையாம்பட்டியை சேர்ந்த பிரபு என்பவரிடம் ரூ.90 ஆயிரம் என மொத்தம் ரூ.6.55 லட்சம் ரொக்கப் பணத்தைப் பறக்கும் படை குழுவினர் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ராசிபுரம் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான சக்திவேல் வசம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் ராசிபுரம் சார்பு கருவூலத்தில் அவற்றை ஒப்படைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்மந்தப்பட்டவர்கள் அங்கு உரிய ஆவணங்களை வழங்கி பணத்தைப் பெற்றுச் செல்லலாமென தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
..
ராசிபுரம் தொகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.6.55 லட்சம்