பேரையூர் பகுதிகளில் உள்ள செங்கல் சூலைகளுக்கு மணல் அள்ள அனுமதிக்குமாறு 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் பேரையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான சிலைமலைபட்டி, துள்ளுக்குட்டி நாயக்கணூர், வன்னிவேலம்பட்டி, சந்தையூர், கீழப்பட்டி, மேலப்பட்டி, உலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட செங்கல் சூலைகள் செயல்பட்டு வருகிறது.
இந்த செங்கல் சூலைகளில் சுமார் 5000த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த செங்கல் சூலைகளுக்காக அந்த பகுதியில் உள்ள கண்மாய்களில் மணல் அள்ள மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே அனுமதி கேட்டு மனு அளித்ததாகவும், அதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மணல் அள்ளுவதைத் தடுப்பதாகவும் , மணல் அள்ள அனுமதியில்லை எனவும் கூறப்படுகிறது . இதனால் செங்கல் சூலைகளுக்கு மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதால் ஆத்திரமடைந்த 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உசிலம்பட்டி வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து அலுவலகத்திற்கு காரில் வந்த கோட்டாட்சியரை மக்கள் முற்றுகையிட்டு , காரை மறித்தனர் . அதனை தொடர்ந்து காரை விட்டு இறங்கிய கோட்டாட்சியர் மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனை தொடர்ந்து முற்றுகையைக் கைவிட்டு கிராம மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர் . இதனால் கோட்டாட்சியர் அலுவலகம் பரபரப்பாகக் காணப்பட்டது.