தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி 18, 19 ஆகிய 2 வார்டுகளில் குடிநீர் விநியோகம் பற்றாக்குறையால் திங்கள்கிழமை பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் கூடலூர் இரண்டாம் நிலை நகராட்சியாக 21 வார்டுகள் உள்ளது. இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு லோயர் கேம்பில் உள்ள கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.
நீரேற்று நிலையத்தில் ஏற்பட்டுள்ள மின்சார மோட்டார் பழுதால் கடந்த சில நாள்களாக கூடலுக்கு குடிநீர் சப்ளை செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதில் 18 மற்றும் 19 வார்டு பகுதிகளான வடக்கு ரத வீதி மற்றும் ஆசாரிமார் தெரு ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை.
இந்நிலையில் இப்பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்கக்கோரி அப்பகுதி பெண்கள் திங்கள் கிழமை தெருச்சாலை சந்திப்பில் காலிக்குடங்களுடன், கற்களையும் வைத்து, அந்த தெரு வழியாக வாகனங்கள் எதுவும் செல்லாதவாறு பாதையை அடைத்து மறியல் போராட்டம் நடத்தினர்.
தகவல் கிடைத்ததும் நகராட்சி ஆணையர் ஆறுமுகம், பொறியாளர் ராமசுப்பிரமணியன், கூடலூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜேம்ஸ் ஜெயராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பெண்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.