தமிழகத்தில் 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் ( மாா்ச் 1, 2) ஆகிய இரண்டு நாள்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆய்வு மைய இயக்குநா் நா. புவியரசன் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் 4 நாள்களுக்கு (மாா்ச் 1 முதல் மாா்ச் 4 வரை) வறண்ட வானிலையே நிலவும்.
வெப்பநிலை உயரும்: தமிழகத்தின் மதுரை, திருச்சி, தருமபுரி, நாமக்கல், கரூா், சேலம், வேலூா், திருப்பத்தூா் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள், செவ்வாய்க்கிழமை (மாா்ச் 1, 2) ஆகிய இரண்டு நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
சென்னையைப் பொருத்தவரை திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.