சென்னை: தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் புதிய விதியின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் இடைக்கால நிவாரணம் கோரி நீதிமன்றத்தை அணுகலாம் என டிஜிட்டல் நியூஸ் பப்ளிஷர்ஸ் அசோசியேசனுக்கு அனுமதி வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் உறுப்பினர்களாக உள்ள டிஜிட்டல் நியூஸ் பப்ளிஷர்ஸ் அசோசியேஷன் மற்றும் பத்திரிகையாளர் முகுந்த் பத்மநாபன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களில், சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்பு, இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனையடுத்து , முகநூல், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், சுட்டுரை உள்ளிட்ட சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிய தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள் சட்டம்) விதிகள் 2021-ஐ கடந்த பிப்ரவரி மாதம் கொண்டு வந்தது.
இந்த புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, சுய ஒழுங்குமுறை நடைமுறையில் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிஜிட்டல் தளத்தில் வெளியிடப்படும் செய்திகளை, சம்பந்தப்பட்ட வெளியீட்டாளரின் விளக்கம் கேட்காமல் முடக்கம் செய்ய தகவல் தொழில்நுட்ப துறை செயலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது தன்னிச்சையானது. எனவே, செய்திகளை முடக்கம் செய்ய அதிகாரம் வழங்கும் பிரிவின் அடிப்படையில் தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும். மத்திய அரசின் இந்த புதிய விதிகளை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுவுக்கு மத்திய அரசு இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர். அதேநேரம், இந்த புதிய விதியின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மனுதாரர் சங்கம், இடைக்கால நிவாரணம் கோரி நீதிமன்றத்தை அணுகலாம் என உத்தரவிட்ட நீதிபதிகள், ஏற்கனவே இந்த புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தாக்கல் செய்த வழக்குடன் சேர்த்து இந்த வழக்கையும் விசாரணைக்கு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனர்.