திருப்பூர்: தமிழகத்தில் வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருவாய் இல்லாத அனைத்துக் குடும்பத்தினருக்கும் மாதம் ரூ. 7,500 உதவித் தொகை வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
திருப்பூர் மாவட்ட அனைத்துத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டுக்குழுக் கூட்டம் ஏஐடியூசி பனியன் பேக்டரி சங்க அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக்கூட்டத்துக்கு ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் பி.ஆர்.நடராஜன் தலைமை வகித்தார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தில்லியில் 200 நாள்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்வது.
4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், மூன்று வேளாண் சட்ட திருத்த மசோதா, மின்சாரா சட்ட திருத்தங்கள் ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
விவசாயிகளின் விலைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும்.
தமிழகத்தில் வருமான வரி கட்டும் அளவுக்கு வருவாய் இல்லாத அனைத்து குடும்பத்தினருக்கும் மாதம் ரூ.7,500 நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க முயற்சிக்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் குமரன் சிலை முன்பாக வரும் ஜூன் 26 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் என்.சேகர், சிஐடியூ மாவட்ட பொதுச்செயலாளர் கே.ரங்கராஜன், சிஐடியு பனியன் சங்கச் செயலாளர் ஜீ.சம்பத்,எல்.பி.எஃப். மாவட்ட துணைத் தலைவர் ரங்கசாமி, ரத்தினசாமி, எம்.எல்.எஃப்.பனியன் சங்க செயலாளர் மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.