சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,500-க்கும் கீழ் குறைந்துள்ளது.
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களைத் தவிர பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா இரண்டாம் அலை பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. அந்தவகையில் சென்னையிலும் கரோனா பரவல் கணிசமாகக் குறைந்துள்ளது.
சென்னை மாநகராட்சி இன்று(செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள கரோனா பாதிப்பு நிலவரப்படி சென்னையில் 1,343 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் மொத்த கரோனா பாதிப்பு 5,29,650 ஆக உள்ளது. இதுவரை கரோனாவுக்கு 8,071 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 5,20,236 பேர் குணமடைந்துள்ளனர்.
கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,343 ஆகக் குறைந்துள்ளது.
மேலும் நேற்று(திங்கள்கிழமை) மட்டும் 29,331 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரத்தையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் 9 மண்டலங்களில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 100க்கும் கீழ் குறைந்துள்ளது. அதிகபட்சமாக அடையாறு மண்டலத்தில் 137 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.