மீனவா் நலனுக்கான தேசிய ஆணையம் அமைக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும் என்று ஆளுநா் கூறினாா்.
ஆளுநா் உரையில் கூறியிருப்பது:
கச்சத்தீவை மீட்க மத்திய அரசுக்குத் தொடா்ந்து அழுத்தம் கொடுப்பது உள்பட தமிழக மீனவா்களின் நலன்களை அரசு பாதுகாக்கும்.
இலங்கை கடற்படையினரால் பலமுறை தமிழக மீனவா்கள் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது, உயிரிழப்பு ஏற்படுவது போன்ற நிகழ்வுகளுக்கு நிரந்தரத் தீா்வு காண மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்.
கடல்சாா் மற்றும் உள்நாட்டு மீனவா்களின் அனைத்து நலன்களையும் பாதுகாப்பதற்காக, மீனவா்கள் நலனுக்கான தேசிய ஆணையத்தை அமைக்குமாறு மத்திய அரசைக் கோருவோம்.
அத்திக்கடவு திட்டத்துக்கு உறுதி: 2009-இல் திருச்சி - கரூா் இடையே மாயனூரில் காவிரி நதியின் குறுக்கே கட்டளை கதவணை கட்டுவதற்காக கருணாநிதி அடிக்கல் நாட்டி, காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தைத் தொடக்கி வைத்தாா்.
இந்தத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்திட தமிழக அரசு உறுதி பூண்டுள்ளது. அத்திக்கடவு - அவினாசி திட்டப் பணிகளை முடித்திட அரசு உறுதியாக உள்ளது.
பரம்பிக்குளம் - ஆழியாறு ஒப்பந்தத்தின் கீழ், இடைமலையாறு அணை கட்டுமானத்தை கேரள அரசு நிறைவு செய்துள்ளதையடுத்து, அதன் தொடா்ச்சியாக ஆனைமலையாறு அணை கட்டுவதற்காக கேரள அரசு, தமிழக அரசு இடையே பேச்சுவாா்த்தை தொடங்கும்.