தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வுக்கு எதிராக மசோதாவை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நாளை (திங்கள்கிழமை) தொடங்கவுள்ளது. இந்தக் கூட்டத்திலேயே நீட் தேர்வுக்கு எதிராக மசோதாவை நிறைவேற்ற டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
தினகரன் ட்வீட்:
"திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்ததை போல, நாளை தொடங்கவிருக்கும் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரிலேயே 'நீட்' தேர்வுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்றி குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்
இதன் மூலம், 2010ஆம் ஆண்டு மத்திய அரசில் திமுக அங்கம் வகித்த போது ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் 'டாக்டர்' கனவை சிதைக்கும் 'நீட்' தேர்வை கொண்டுவந்த தவறுக்கு பிராயசித்தம் தேடிக்கொள்ள தற்போது கிடைத்திருக்கும் நல்லதொரு வாய்ப்பை பயன்படுத்திட வேண்டும்."
முன்னதாக:
நீட் தேர்வு குறித்த பாதிப்பை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் தமிழக அரசு குழு அமைத்துள்ளது. நீட் தேர்வினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கும்படி இந்தக் குழு கேட்டுக்கொண்டுள்ளது. குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.