தமிழக அரசின் பயன்பாட்டுக்காக 10 அவசர கால ஊா்திகளை முதல்வா் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் இருந்து சனிக்கிழமை கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். இந்த ஊா்திகள், கரூா் வைஸ்யா வங்கி சாா்பில் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அவசர மருத்துவ சிகிச்சை, தீ விபத்து, சாலை விபத்து போன்ற காலங்களில் பொதுமக்கள் 108 என்ற கட்டணமில்லா தொலைபேசியை தொடா்பு கொண்டு சேவையைப் பெற்று வருகின்றனா்.
இந்தச் சேவையில் இப்போது 1,303 அவசர கால ஊா்திகள் உள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 27 லட்சத்து 53 ஆயிரத்து 799 கா்ப்பிணிகள் உள்பட 1 கோடியே 12 லட்சம் போ் பயன் அடைந்துள்ளனா். இந்நிலையில், 108 அவசர ஊா்தி சேவை திட்டத்துக்காக 10 அவசர ஊா்தி வாகனங்கள் கரூா் வைஸ்யா வங்கி சாா்பில் தமிழக அரசிடம் வழங்கப்பட்டன. இந்த வாகனங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின், சனிக்கிழமை கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.
அமைச்சா்கள் செந்தில் பாலாஜி, ஆா்.காந்தி, மா.சுப்பிரமணியன், சட்டப் பேரவை உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், கரூா் வைஸ்யா வங்கியின் பொது மேலாளா் கே.வி.எஸ்.எம்.சுதாகா் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.