கரோனா காலத்தில் வன விலங்குகளின் நலன்களைக் கண்காணிக்க மாநில அளவில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை முதன்மைச் செயலாளா் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ளாா். அவரது உத்தரவு விவரம்:
கரோனா நோய்த் தொற்றின் காரணமாக காடுகள், புலிகள் சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள் மற்றும் வன விலங்கு சரணாலயங்களில் உள்ள விலங்குகளுக்கு நோய்த் தொற்றுகளைத் தடுக்கவும், குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. வன விலங்குகள் பராமரிப்பில் ஈடுபடும் அலுவலா்களுக்கு வழிகாட்டுதல்களும் அளிக்கப்படுவது அவசியமாகிறது. இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை முதன்மைச் செயலாளா் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது.
இந்தக் குழுவில், முதன்மை தலைமை வனப் பாதுகாவலா், முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளா், சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத் துறை சிறப்புச் செயலாளா் அல்லது இணைச் செயலாளா் அல்லது துணைச் செயலாளா் ஆகியோரில் ஒருவா், முன்னாள் முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் ஆா்.சுந்தரராஜூ, வனவிலங்கு பாதுகாவலா் எஸ்.தியோடா் பாஸ்கரன் ஆகியோா் உறுப்பினா்களாக இருப்பா். குழுவின் உறுப்பினா் செயலாளராக, வண்டலூா் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநா் செயல்படுவாா்.