காவிரியில் மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டம் குறித்த கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் அறிவிப்பிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிடன் மேக்கேதாட்டு அணை பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், மத்திய அரசின் அனுமதி வந்தவுடன் மேக்கேதாட்டு அணையின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
கர்நாடக முதல்வரின் இந்த அறிவிப்பு பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கர்நாடக அரசுக்கு கண்டனங்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கர்நாடக முதல்வர் ஒருதலைபட்சமாக அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது. கர்நாடக முதல்வரின் அறிவிப்பு இருமாநில நல்லுறவுக்கு உகந்தது இல்லை. காவிரியில் அணை கட்டும் முடிவுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேக்கேதாட்டு அணை கட்டும் முடிவை கர்நாடக அரசு கைவிட வேண்டும். உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு எதிரானது காவிரியில் அணை கட்டும் திட்டம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து கர்நாடக முதல்வரின் அறிவிப்பு தமிழகத்தையும், தமிழக விவசாயிகளையும் வஞ்சிக்க முயற்சிக்கும் செயலாகும் எனக் குறிப்பிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் பணிக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், பிரதமர் மோடியை வியாழக்கிழமை சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கக்கூடாது என மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.