அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பெரிய வள்ளி குளம் பகுதியில் புதன்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட சாலை விபத்தில் தலையாரி உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அருப்புக்கோட்டை வட்டாட்சியராகப் பணிபுரிபவர் ரவிச்சந்திரன். இவரது வீடு விருதுநகரில் உள்ளதால், வழக்கம் போல அவர் புதன்கிழமை இரவு பணி முடிந்த பின் தனது அரசு வாகனத்தில் சென்று வீட்டில் இறங்கி விட்டார். இதன் பின் அருப்புக்கோட்டைக்கு மீண்டும் திரும்பி வந்த அந்த வாகனத்தை அருப்புக்கோட்டை தலையாரி சுகுமார் என்பவர் ஓட்டி வர, வட்டாட்சியரின் அரசு ஓட்டுநரான மருதுபாண்டியும் உடன் வாகனத்தில் வந்துள்ளார்.
சாலை விபத்தில் உயிரிழந்த தலையாரி சுகுமார்.
இந்நிலையில், இரவு 12.30 மணிக்கு அவர்கள் வந்த வாகனம் விருதுநகர் அருகே பெரிய வள்ளி குளம் கிராமம் அருகே வந்துகொண்டிருந்த போது எதிரே வந்த லாரியில் மோதி பயங்கரமாக விபத்துக்குள்ளானது.
இதில், தலையாரி சுகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே வாகனத்தில் வந்த வட்டாட்சியரின் அரசு வாகன ஓட்டுநர் மருதுபாண்டி பலத்த காயமடைங்களுடன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அருப்புக்கோட்டை தாலுகா காவல் துறையினர் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநர் வேலுச்சாமி என்பவரைக் கைது செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.