தம்மம்பட்டி: சேலம் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்படாததால், தம்மம்பட்டி பகுதி மதுப்பிரியர்கள், எல்லை தாண்டிச் சென்று மது வாங்கி வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரத்திற்கு பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ள 27 மாவட்டங்களுக்கு நேற்று (திங்கள்கிழமை) முதல், புதிய தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே.. கரோனாவின் கோரத் தாண்டவம்: பெற்றோரை இழந்து பச்சிளம் தம்பியுடன் தவிக்கும் சிறுமி
கோவை, சேலம் நாமக்கல், தஞ்சை, நாகை உள்பட 11 மாவட்டங்களுக்கு புதிதாக தளர்வுகள் இன்றி பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய தளர்வுகள் அளிக்கப்பட்ட 27 மாவட்டங்களில், உரிய வழிகாட்டுதலின் படி, டாஸ்மாக் மதுக்கடைகள், ஜீன் 14 முதல் திறக்கப்பட்டன. அதையடுத்து, நீண்ட நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் மகிழ்ச்சியடைந்த மதுப்பிரியர்கள், அருகில், தளர்வுகள் அளிக்கப்பட்ட மாவட்டங்களின் ஊர்களுக்கு படையெடுத்து செல்கின்றனர்.
அதன்படி, சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால், தம்மம்பட்டி சுற்றுவட்டார மதுப்பிரியர்கள், திருச்சி மாவட்ட எல்லையோரத்தில், தம்மம்பட்டியில் இருந்து, சில கிலோ மீட்டர் தூரம் உள்ள பாதர்பேட்டை, உப்பிலியாபுரம் ஊர்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்குச் செல்கின்றனர்.