தமிழகத்தில் புதிதாக 14,016 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த 50 நாள்களில் இல்லாத குறைந்த எண்ணிக்கையாகும் .
மாநிலத்தில் இதுவரை 2.99 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 23 லட்சத்து 53,721 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 1,895 பேருக்கும், ஈரோட்டில் 1,323 பேருக்கும், சென்னையில் 935 பேருக்கும் ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கரோனா தொற்றிலிருந்து மேலும் 25,895 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 21 லட்சத்து 74,247-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 1 லட்சத்து 49,927 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 267 போ் பலியாகியதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29,547-ஆக அதிகரித்துள்ளது.