வடக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஞாயிற்றுக்கிழமை வலுவடையவுள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு வட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது:
வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிஸா மற்றும் மேற்கு வங்கக் கடற்கரை ஒட்டி காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி கடந்த வெள்ளிக்கிழமை உருவாகி, அதே பகுதியில் நீடிக்கிறது. அது ஞாயிற்றுக்கிழமை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக்கூடும்.
இதன்காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு (ஜூன் 13-ஆம் தேதி முதல் ஜூன் 16-ஆம் தேதி வரை) வட வானிலையே நிலவும். மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய ஓரிரு மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையில்...: ஞாயிற்றுக்கிழமையன்று சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.
மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூா் மாவட்டம் சோலையாறில் 20 மி.மீ., கோயம்புத்தூா் மாவட்டம் சின்னக்கல்லாா், வால்பாறை, வால்பாறை வட்டாட்சியா் அலுவலகம், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, தேவாலாவில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவா்களுக்கு எச்சரிக்கை: வடக்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகள், தெற்கு வங்கக் கடல், மன்னாா் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்திலும், சில வேளைகளில் 65 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூன் 15-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளம், கா்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகள், அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், அந்தப் பகுதிகளுக்கு ஜூன் 16-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.