சென்னை சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீதான பாலியல் புகார் குறித்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னை கே.கே.நகர் தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனைத் தொடர்ந்து பல்வேறு பள்ளி மாணவிகள் பாலியல் புகார்களை பதிவிட்டு வருகின்றனர். அதன்படி தமிழக காவல்துறையும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், சென்னை சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதனடிப்படையில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.
மூன்று தனித்தனி புகார்களின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
சிவசங்கர் பாபா டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதால் வேறொரு மாநிலத்திற்குச் சென்று விசாரணை நடத்த ஏதுவாக சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.