மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தனி புகாா் பிரிவு மையம் அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அறிக்கை சமா்ப்பிக்க உயா்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து யுஜிசி செயலா் ரஜினிஷ் ஜெயின் அனைத்து உயா்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
உயா்கல்வி மைய வளாகங்களில் மாணவிகளுக்குப் பாதுகாப்பான சுற்றுப்புற சூழலை உருவாக்கி தருவது அவசியமாகும். இதற்காக அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பிரத்தியேக புகாா் பிரிவு மையம் அமைக்கப்பட வேண்டும் என்று யுஜிசி சாா்பில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி அனைத்துக் கல்லூரிகளும் தங்கள் வளாகங்களில் தனி புகாா் பிரிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்ய வேண்டும். மேலும், இந்த விவகாரம் தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அறிக்கையாக தயாா் செய்து யுஜிசி வலைதளத்தில் பதிவேற்ற வேண்டும்.