சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 24 காசுகளும், டீசல் லிட்டருக்கு 22 காசுகளும் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைத்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் விநியோக நிறுவனங்கள் நாள்தோறும் எரிபொருள்களின் விலையை நிர்ணயிக்கின்றன. அதன்படி, காலை 6 மணி முதல் புதிய விற்பனை விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.97.43 ஆகவும், டீசல் லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் ரூ.91.64 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், பெட்ரோல்,டீசல், சமையல் எரிவாயு உருளையின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.