வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூர் பகுதி பழ வகைகள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் பின்னேற்பு மானியம் வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக வெள்ளக்கோவில் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் யு.சர்மிளா சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், முத்தூர் கீழ்பவானி பாசன வாய்க்கால் பகுதி விவசாயிகள் மா, எலுமிச்சை, நெல்லி, கொய்யா, சப்போட்டா, நாவல், தர்ப்பூசணி, பப்பாளி உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்களைச் சாகுபடி செய்து வருகின்றனர். சாகுபடியை சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
பழ வகைகள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 2021 - 22 ஆம் ஆண்டு தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் பின்னேற்பு மானியம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பழ வகைகளின் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைக்கவும், நல்ல விலை கிடைக்க தரம் பிரித்து உள் கவரில் போட்டு விற்கவும் ரூ.2 லட்சம் பின்னேற்பு மானியம் வழங்கப்படுகிறது.
விருப்பப்படும் விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர் சான்று, புகைப்படங்கள், பட்டா, சிட்டா, அடங்கல், பழ வகைகள் சாகுபடி நில வரைபடம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.