திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகக் கட்டடத்தை இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (31.7.2021) தலைமைச் செயலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகக் கட்டடத்தைக் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் இயங்கி வருகின்றன.
தமிழ்நாட்டில் முதல்முறையாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்குப் புதிய கட்டடம் 3282 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடம், மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலகம், இளம் சிறார்களுக்கான காதுகேளாதோர் பயிற்சி மையம், உதவி உபகரணங்கள் வழங்கும் பிரிவு, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சாய்தளம், சிறப்புக் கழிவறை உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச் செயலாளர் ஆர்.லால்வேனா, மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.