சென்னை: பிளஸ் 2 தேர்வெழுத தனித் தேர்வர்களாக விண்ணப்பித்திருந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மதிப்பெண் நடைமுறை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வெழுத தனித்தேர்வர்களாக விண்ணப்பித்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு, தேர்வெழுதுவதிலிருந்து விலக்கு அளித்துள்ள தமிழக அரசு, மாற்றித்திறனாளி தனித்தேர்வர்கள் அனைவரும் +2 தேர்ச்சி பெற்றதாகவும் அறிவித்துள்ளது.
மேலும், மதிப்பெண்களின் அடிப்படையில் சுய விருப்பத்தின் பேரில் மாற்றுத்திறனாளிகள் தேர்வெழுதலாம் என்றும், தேர்வின் முடிவே இறுதியானது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நமது மாநிலத்தில் 2021ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதுவதிலிருந்து அனைத்து மாணவர்களுக்கும் விலக்களித்ததைப் போல ஆகஸ்டு 2021 திங்களில் நடைபெறவுள்ள பன்னிரண்டாம் வகுப்புத் துணைத் தேர்வுகளைத் தனித் தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத் திறனாளி மாணவர்கள் அனைவரும் 2016ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப் பிரிவு 17(i)இன் அடிப்படையில் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் மாணவர்கள் அனைவருக்கும் மதிப்பெண்கள் வழங்குவது குறித்த நடைமுறையை வடிவமைத்து உரிய ஆணைகள் பள்ளிக் கல்வித்துறையால் வெளியிடப்படும்.
மேலும் மேற்படி தேர்வுகளை எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத் திறனாளி மாணவர்கள் தாங்கள் விரும்பும்பட்சத்தில் இத்தேர்வினை எழுதலாம் என்றும் தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு எழுதும் மாணவர்கள் பின்னாளில் இந்த ஆணையின் அடிப்படையில் தேர்ச்சி பெற்றதாகத் தங்களை அறிவிக்குமாறு கோரலாகாது என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.