காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வெள்ளிக்கிழமை ஆட்டோ டிரைவரை கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் நகர் பெரிய காஞ்சிபுரம் பகுதியில் மளிகைச்செட்டித் தெருவில் வசித்து வருபவர் நவ்ஷத்(35). ஆட்டோ டிரைவரான இவர், காஞ்சிபுரம் அருகே சித்தேரிமேடு பகுதியைச் சேர்ந்த ரேவதியை காதலித்து, கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் ரேவதியின் பெயரை ரசியா என மாற்றம் செய்து கொண்டும் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது. சம்பவ நாளன்றும் குடிபோதையில் இருந்த கணவருக்கும், மனைவிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது.
மனைவி ரசியாவை கணவர் நவ்ஷத் கத்தியால் குத்த முயன்றபோது அதை பறித்து கணவரை குத்தியதில் நவ்ஷத் உயிரிழந்தார். சம்பவ இடத்தில் காஞ்சிபுரம் டி.எஸ்.பி.முருகன் விசாரணை நடத்தினார். உடல் பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிவகாஞ்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்து ரசியாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.