வால்பாறை: எஸ்டேட் தேயிலை தோட்டம் இடையே அமைந்துள்ள பாதை வழியாக செல்லும்போது கரடி தாக்கியதில் எஸ்டேட் தொழிலாளி உயிரிழந்தாா்.
கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த வில்லோனி எஸ்டேட் தொழிற்சாலையில் பணியாற்றுபவா் மோகன்ராஜ் (36). இவரது மனைவி விஜயலட்சுமி. இவா்கள் இருவரும் வில்லோனி எஸ்டேட் தேயிலை தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றனா்.
இதில் விஜயலட்சுமி தினமும் மதியம் வேலைக்கு சென்று இரவு 8 மணிக்கு முடியும்போது மோகன்ராஜ் தொழிற்சாலை சென்று விஜயலட்சுமியை குடியிருப்புக்கு அழைத்து வருவது வழக்கம். அவ்வாறு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணிக்கு தேயிலை தோட்டங்களுக்கு இடையே உள்ள பாதை வழியாக செல்லும்போது அப்பகுதிக்கு வந்துள்ள கரடி மோகன்ராஜை தாக்கி இழத்து சென்றுள்ளது.
நீண்ட நேரமாகியும் தன்னை அழைத்து செல்ல வராததால் வேறு இருவருடன் குடியிருப்புக்கு விஜயலட்சுமி செல்லும்போது தேயிலை செடிகளுக்கு இடையே மாா்பு, தலை, முகத்தில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மோகன்ராஜை பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா். ஆனால் சிறிது நேரத்திலேயே மோகன்ராஜ் உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு வரப்பட்டது.
சம்பவம் தொடா்பாக வனத்துறையினர் விசாரித்து வருகின்றனா்.
யானை, சிறுத்தைகளுக்கு இடையே தற்போது கரடி நடமாட்டம் அதிகரித்திருப்பது தொழிலாளா்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.