அம்பாசமுத்திரம்: ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு பாபநாசத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் தாமிரவருணியில் குளித்து மகிழ்ந்தனர்.
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் முதன்மையான சுற்றுலாத் தலங்களில் ஒன்று பாபநாசம். கரோனா பொதுமுடக்கத்தால் பல சுற்றுலாத்தலங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பருவ மழை காலமான இப்போது குற்றாலம் அருவிகளிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாபநாசத்திற்கு மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து குவிகின்றனர்.
ஞாயிறு விடுமுறை நாளானதால் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் தாமிரவருணியில் குளித்து மகிழ்ந்தனர். பாபநாசம் கோவில் படித்துறை, அய்யா கோவில் படித்துறை, தெற்கு அரண்மனை படித்துறை உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகளுடன் குளித்து குதூகலித்தனர்.
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு தரிசனம் செய்ய மட்டும் அனுமதிப்பதால் பக்தர்களும் பாபநாசம் தாமிரவருணியில் குளித்து சொரிமுத்து அய்யனார் கோவிலில் தரிசனம் செய்து சென்றனர். அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளுக்கு வனத்துறை தடை விதித்திருப்பதால் பாபநாசம், சிவந்திபுரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, முக்கூடல், சேரன்மகாதேவி பகுதிகளில் தாமிரவருணி ஆற்றில் குளித்துச் சென்றனர்.