கம்பம்: முல்லைப் பெரியாறு அணைக்கு மூன்றாவது நாளாக நீர்வரத்து அதிகரித்திருப்பதால் அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டுகிறது.
தென்மேற்கு பருவமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அதிக நீர்வரத்து காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை 1.25 அடியும், சனிக்கிழமை 2.30 அடியும் உயர்ந்து, அணையின் நீர்மட்டம் 133.80 அடியாக இருந்தது.
மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு, 4,865 கன அடி நீர் வந்தது. இதனால் அணையில் ஒரே நாளில் 1.45 அடி உயர்ந்து, அணையின் நீர்மட்டம், 135.25 அடியானது.
நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதன் காரணமாக அணைக்குள் அதிக நீர்வரத்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் 136 அடியை எட்டிவிடும் என்று பொறியாளர்கள் தெரிவித்தனர். அணை நீர் மட்டம், 135.25, நீர் இருப்பு 5,929 மில்லியன் கன அடி, அணைக்கு வரும் நீர்வரத்து 4,875 கன அடியாக உள்ளது.
தமிழகப் பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு 900 கனஅடியாக இருந்தது. அணையில் 10.4 மி. மீ. மழையும், தேக்கடியில் 10 மி. மீ., மழையும் பெய்தது.