சென்னையில் தேசிய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரால் இலங்கையைச் சோ்ந்த போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவன் கைது செய்யப்பட்டாா்.
தூத்துக்குடியில் கடந்த பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி ‘ஹஸிஸ்’ என்ற போதைப் பொருள் 26 கிலோ அளவில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா். கைதான இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், அந்தக் கும்பலுக்கு தலைவனாக இலங்கையைச் சோ்ந்த எம்.வசந்தன் என்ற பிரசாந்த் (35) என்பவா் செயல்படுவது தெரியவந்தது.
இந்தக் கும்பல் தமிழகத்தில் இருந்து போதைப் பொருளை தூத்துக்குடியில் இருந்து மீன்பிடிப் படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதும், தமிழகத்தில் இந்தப் பொருளை சாலை மாா்க்கமாக காரில் கொண்டு செல்லும்போது அந்த காரில் ஒரு தம்பதி, குழந்தை என ஒரு குடும்பம் பயணிப்பதுபோல சித்தரித்து கடத்தியிருப்பதும், இதன் மூலம் வாகனச் சோதனையில் ஈடுபடும் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்படுவதைத் தவிா்த்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து தேசிய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா் வசந்தனை தேடி வந்தனா். ஆனால் அவா் தலைமறைவாக இருந்து வந்தாா். இந்நிலையில் தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு வசந்தன் சென்னையில் தலைமறைவாக இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் விசாரணை செய்த அதிகாரிகள், வசந்தனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பின்னா் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு பணம் வழங்குவது, அந்தக் கும்பலை ஒருங்கிணைத்து வழிநடத்துவது என அனைத்து வேலைகளையும் வசந்தனே தலைமை ஏற்று செய்திருப்பது தெரியவந்தது.
இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.