திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே பெண்கேட்டு கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த உறவுக்கார இளைஞர் அம்மிக் குழவியை தலையில் போட்டு கல்லூரி மாணவியை சனிக்கிழமை இரவு கொலை செய்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பூவாளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் மகள் மௌனிகா(18). இவர் முத்துப்பேட்டை அருகே உள்ள பேட்டை கிராமத்தில் தனது பாட்டி வீட்டில் தங்கி தஞ்சையில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
இவரை இவரது உறவுக்காரர் திருக்களர் கிராமத்தைச் சேர்ந்த பொதியப்பன் மகன் சிவசங்கர், மௌனிகாவை திருமணம் செய்து கொடுக்க வலியுறுத்தி கேட்டுள்ளார். சிவசங்கர் படிக்காதவர் என்பதால் பெண் கொடுக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சிவசங்கர் சனிக்கிழமை இரவு அம்மி குழவியால் மௌனிகாவைத் தாக்கியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நிகழ்விடத்தை முத்துப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் வெள்ளதுரை இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து முத்துப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து கொலையாளி சிவசங்கரைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.