தமிழகத்தில் தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது பதியப்படும் வழக்குகளின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை நெருங்கியது.
தமிழகத்தில் மாா்ச் மாதம் முதல் கரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்கள் மீதும், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மீதும் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து வருகின்றனா். கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி தொடங்கி ஜூலை 22-ஆம் தேதி வரையிலான 105 நாள்களில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது 18 லட்சத்து 41,061 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் வியாழக்கிழமை மட்டும் 7,429 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி ஜூலை 22-ஆம் தேதி வரை, 89,333 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், வியாழக்கிழமை மட்டும் 104 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.