தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி உருவப் படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகஸ்ட் 2-இல் திறக்கவுள்ளதாக பேரவைத் தலைவர் அப்பாவு சனிக்கிழமை அறிவித்தார்.
தலைமைச் செயலகத்தில் மாலை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதனை அறிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது:
"படத் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக வந்து சிறப்பிக்கவும், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமையேற்று நடத்தித் தரவும், முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலை வகித்து சிறப்பிக்கவும் இசைவு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை பேரவைச் செயலகத்தின் மூலம் சிறப்பாக நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
குடியரசுத் தலைவர் பேரவை வளாகத்துக்கு மாலை 5 மணிக்கு வருகிறார். அவர் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று படத்தை திறந்து வைக்கிறார்."