நிலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த 4 நாள்களுக்கு மிக கனமழை தொடர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தியில்,
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தேனி, திண்டுக்கல், தென்காசி, குமரி, நெல்லை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும்.
நாளையும் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழையும், தேனி, திண்டுக்கல், தென்காசி, வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மீனவர்கள்
தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, தெற்கு வங்கக் கடல், மத்திய வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.